Thursday, December 19, 2013

தொண்டைமானாறு :






தொண்டைமானாறு :

தொண்டைமானாறு என்ற பெயரை கேட்டதும் யாழ்பாண குடாநாட்டின் வடகரையில் தொண்டைமானாறு என்ற ஊரும், ஊரின் தென்கோடியில் உள்ள செல்வச்சந்நிதி என்ற இனிய பெயரை உடைய முருகன் ஆலயமும் இந்த இடங்களைத் தெரிந்த ஒருவரின் மனக்கண்முன் தோன்றும் ..

தொண்டைமானாறு என்னும் இவ்விடத்திற்கு பெயர் வரக்காரணம் , தொண்டைமான் மன்னர் ஒருவரின் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்ததே காரணம் .

இங்கே வந்த தொண்டைமான்  அரசன் யார் ?
அவன் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்து வந்தான் ?
எப்போது இங்கு வந்தான் ?
வந்த தொண்டைமான்  அரசன் என்ன செய்தான் ?

போன்ற பல கேள்விகள் நமக்கு எழும் .

இதற்கான பதிலை இலங்கை வரலாற்று ஆசிரியர்களால் ஆராய்ந்து எழுதப்பட்ட "தொண்டைமானாரும் செல்வச்சநிதியும் " என்னும் நூலில் உள்ள செய்தியை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன் .

நூல் :தொண்டைமானாரும் செல்வச்சநிதியும்
ஆக்கியோன் : சே.நாகலிங்கம்

வெளியீடு :
வல்வை வரலாற்று ஆவண காப்பகம்
கெனடா

தாய்நாட்டுத் தமிழர்களின் வரலாற்றை பார்க்கும் போது, அங்கே கிபி இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனும் அவனை தொடர்ந்து , தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு அரசர்கள் , தொண்டைமான் என்னும் பட்டதோடு ஆட்சி புரிந்ததை நாம் காண்கிறோம் .

இவர்களில் யாழ்பாணத்திற்கு வந்த தொண்டைமான் யார் என்பதே நமது கேள்வி ?

இதை பற்றி நன்கு ஆராய்ச்சி செய்த இலங்கை வரலாற்று வல்லுனரும் , ஆராய்ச்சியாளருமான "முதலியார் இராசநாயகம் " அவர்கள் ,

இங்கே வந்த தொண்டைமான் 11 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் , 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சோழ சக்கரவர்த்தியாக இருந்த முதலாம் குலோத்துங்க சோழனின் பிரதம படை தலைவனாக இருந்த "கருணாகர தொண்டைமான்தான்" என்று கூறுகிறார் .

குலோத்துங்கனின் கலிங்க வெற்றியை கொண்டாடும் விதமாக , குலோத்துங்கன் அவைபுலவராய் இருந்த ஜெயங்கொண்டார் என்பவர் கலிங்கத்துபரணி என்னும் நூலை இயற்றி அதை அரசபையில் அரங்கேற்றினார் .

இந்த நூலில் ஜெயங்கொண்டார் அவர்கள் குலோத்துங்கனை புகழ்ந்து வாழ்த்து பாடிய பின் சோழ படைக்கு தலைமை தாங்கி , அந்த படையை கலிங்க தேசத்துக்கு நடத்தி சென்று கலிங்க போரில் வென்று கலிங்க தேசத்தை மீண்டும் சோழ பேரரசின் கீழ் ஒரு பகுதியாகிய கருணாகர தொண்டைமான் அவர்களை பின்வருமாறு புகழ்கிறார் .

தொண்டையார்வேந்தனைப் பாடீரே
பல்லவர் தோன்றலைப் பாடீரே
வண்டை வளம்பதி பாடீரே
மறைமொழிந்த பதி மரலில் வந்தகுல
திலகன் வண்டைநகர் ராசன்

இந்த புகழ் மாலைகளிளிருந்து தொண்டைமானின் முன்னோர் தொண்டைமண்டல அரசர்களாய் இருந்தார்கள் என்றும் , அவன் பல்லவ பேரரசர்களின் வழித்தோன்றல் என்றும் சோழநாட்டில் கன்னடனாட்டின் எல்லைக்கு அண்மையில் இருக்கும்  வண்டலூர் என்ற நகரை தலைநகராக கொண்டு அந்த பிரதேசத்தை ஆண்டு வந்த சிற்றரசன் என்பதும் தெரிய வருகிறது .

இவனுடைய முழுப்பெயர் "பல்லவராய திருவரங்க கருணாகர தொண்டைமான்" .திருவரங்க என்ற பெயரில் இருந்தும் , தமிழ்நாட்டில் காணப்படும் தொண்டைமான்களின் ஒரு சமஸ்கிருத கல்வெட்டில் இருந்தும் இவன் விஷ்ணு சமயத்தவன் என்பது உறுதியாகிறது .

###################

குறிப்பு :
 --------

கருணாகர தொண்டைமானை பற்றி பாடிய கம்பர் அவர்கள் ,"சிலைஎழுபது " என்னும் நூலில் ,கருணாகர தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பாடியுள்ளார் .

இதில் கருணாகர தொண்டைமானை பள்ளி நாட்டார்,வீர பண்ணாடர் , வன்னியர், சம்பு குலத்தவன், வன்னியர் எடுத்த வில்லே வில் என்றும், வீரக்கழல் தரித்தவன் என்றும் வர்ணிக்கிறார் .

அதே போல குலோத்துங்கன் மகன் விக்கிரம சோழனை

"அக்கினி குலத்து விக்ரமன் எடுத்த வில்லே "

என்றும் புகழாரம் சூட்டுகிறார் .

"குலத்தலைவர் படை சிறப்பு " என்னும் தலைப்பில் கம்பர்  கீழ்கண்டவாறு பாடியுள்ளார் .

குலத்தலைவர் படைச் சிறப்பு
 ======================

விடையுடையார் வரமுடையார்
வேந்தர்கோ வெனலுடையார்
நடையுடையார் மிடியுடைய
நாவலர்மாட் டருள்கொடையார்
குடையுடையார் மலையன்னர்
குன்றவர்பல் லவர்மும்முப்
படையுடையார் வனியர்பிற
ரென்னுடையார் பகரீரே.




சிலை எழுபது வன்னியரை மலையமன்னரெனவும் பல்லவரெனவும் வருணிப்பதுகவனித்தற்பாலது. சோழப்பெருமன்னர் காலத்திலே தொண்டைமண்டலத்திலாண்டகிழியூர் மலையமான்களையும் பல்லவமரபில் வந்த காடவ அரசர்களையுமே நூல்இவ்வாறு குறிப்பிடுகின்றது.
இக்குறுநில மன்னர் வன்னியரா யிருந்தமைக்குக்கல்வெட்டுச் சான்றுகள் ஆதாரமாயுள்ளன.

பிறகு "பரிசுதரற் சிறப்பு" என்னும் தலைப்பில் கீழ்கண்டவாறு பாடியுள்ளார் .

பரிசுதரற் சிறப்பு
============

அவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந்
தருள்வன் னியரை யாம்புகழ்ச்
செவிக்கா ரமுதமெனக் கேட்டுச்
சிந்தையுவந்து சீர்தூக்கிப்
புவிக்கா யிரம்பொ னிறைநீக்கிப்
பொற்றண் டிகபூடணத்தோடு
கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்
கருணாகரத்தொண்டை வன்னியனே.


##################

இவன் யாழ்பாணத்திற்கு ஏன் வந்தான் என்பதை இப்போது ஆராய்வோம் .


முதலாம் குலோத்துங்கன் அரசு செய்த காலத்தில் முதலாம விசயபாகு என்பவன் இலங்கை அரசனாய் இருந்தான். அரசியல் காரணங்களுக்காக இவர்களுக்கு இடையில் பகை தோன்றியது. இந்தப் பகையின் காரணமாக விசயபாகு தன்னுடன் தனி யுத்தத்திற்கோ படைகளைக் கொண்டு செய்யும் யுத்தத்திற்கோ வரும்படி குலோத்துங்கனுக்குச் சவால் விடுத்தான், என்று சிங்கள வரலாற்று நூலாகிய மகாவம்சம் கூறுகிறது.

இந்தச் சவாலை ஏற்ற குலோத்துங்கன் தனது பிரதம படைத் தலைவனாகிய தொண்டைமானை ஒரு படையுடன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பினான். இதுவே தொண்டைமான் யாழ்ப்பாணத்துக்கு வந்ததற்கு உண்மைக் காரணம். இது தவிர, தொண்டைமான் இங்கே வந்து யாழ்ப்பாண அரசனை போரில் வென்று யாழ்ப்பாணத்தைச் சோழப் பேரரசின் ஒரு பகுதியாக்கினான்.

அதன் பின் இந்நாட்டை அரசு செய்வதற்கான ஒழங்குகளைச் செய்து இந்த நாட்டின் பாதுகாப்புக்காக, இப்போது தொண்டைமானாறு என்று விளங்கும் இடத்தில் ஒரு படைத் தளத்தையும் அமைத்து இந்தப் படைகளின் தலைவர்களாகத் தன்னுடைய உறவினர்களான கங்க, பல்லவராச வம்சங்களைச் சேர்ந்தவர்களையே நியமித்து அவர்களைத் தொண்டைமானாற்றில் குடியேற்றி வைத்தான்.

தொண்டைமான் யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் இங்கே விளையும் உப்பு தன்னுடைய நாட்டுக்குத் தேவையாக இருந்தபடியால் அதைச் சேகரித்து மரக்கலங்கள் மூலமாக அங்கே கொண்டு செல்வதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்தான். தொண்டைமான் காலத்திலும் பின் வந்த ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திலும் தொண்டைமானாறு ஒரு படைத்தளமாய் இருந்தது என்பதற்கு வாழும் குடும்பங்களில் தாய்மார்கள் பாடும் தாலாட்டுப் பாட்டுக்களில் இருந்தும், இங்கே உள்ள காணிப் பெயர்களில் இருந்தும் நாம் காணக் கூடியதாய் உள்ளது.

சில குடும்பங்களிலிருக்கும் தாய்மார்கள் பாடும் தாலாட்டுப் பாடலில் பின்வரும் வரிகள் காணப்படுகின்றன.

“கைக்கோ கனக வள்ளி
காலுக்கோ வீரதண்டை
தண்டையுமோ பொன்னாலே
தாழ்வடமோ முத்தாலே “
---
---
###  என்றும் இறுதியில் பின்வருமாறு பாடுவார்கள்.  ###

“என் பட்டதுரையே
படைமுகத்தின் இராசாவே
நீ போருக்குச் சென்றிடுவாய்
பொழுதோடே வென்றிடுவாய்
வென்ற களரியிலே
வீரபட்டம் கூட்டிடுவாய் “

போர்க்களத்துக்குச் செல்லும்போது வீரக்கழல் அணிந்து செல்வது சத்திரியர்களின் வழக்கம்.

இந்த வழக்கம் தொண்டைமானாற்றில் இருந்து நெடுங்காலத்திற்கு முன்வே மறைந்துவிட்டது . ஆனால் தொண்டைமானாற்றின் அயலூராகிய வல்வெட்டி துறையில் இன்றைக்கும் ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்திருந்தது .

தொண்டைமானாற்றிலுள்ள காநிகளிர் சில பின் வரும் பெயர்களை கொண்டிருன்கின்றன

1.அத்திப்பட்டை ஆண்டவன் கொல்லை
2.நாயினிச்சியார் கொல்லை
3.சேதுபதியர் கண்டு
4.பணிக்க வளவு

யாழ்ப்பான கச்சேரியில் இருக்கும் தொண்டைமானாற்றில் தோம்பு ஏடுகளில் இக்காணி பெயர் களையும் ஆண்களில் பெயர்களையும் தொண்டைமானற்றை பற்றி பல வரலாற்று விபரங்களை பெற்று கொள்ளலாம் ..

அத்திப்பட்டை ஆண்டவன் கொல்லை என்பது யானை படைத்தலைவன் வாழ்ந்த இடம் .


 நாயினிச்சியார் கொள்ளை:

நாயன் என்பது வன்னியர் படைத்தலைவனின் பட்ட பெயர்  . நாயினிச்சியார் கொள்ளை என்றால் வன்னியர் படைத்தலைவன் ஒருவனின் மனைவி வாழ்த்த இடம்.

சேதுபதியார் கண்டு என்பது சேதுபதிக் கண்டர் வாழ்ந்த இடம் கண்டர் என்பதும் வன்னிய படை தலைவர்களின் பட்டப் பெயர்களில் ஓன்று இராக்கா வளவு இந்த வளவில் இராக்கா என்னும் பெயருடைய படைத்தலைவர்கள் தலைமுறையாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது .இராக்காபனை என்று சொல்ல படும் இந்த வளவு தொண்டை மாணற்று பாலத்தின் கிழக்கு தலைப்பிலிருந்து ஏறக்குறைய 75 யார் தூரத்தில் செல்வச் சந்திதிக்குப் போகும் பாதையில கிழக்குப்பக்கமாக அமைந்திருக்கின்றது, இந்த இடத்தில் தான் ஆற்றின் மேற்க்குக்கரையில் ஆற்றை கடக்கும் இடம் அமைந்திருந்தது ஆற்றைக் கடந்த அரசக்கோட்டமாக இருந்த வடமராட்சிக்கு செலலும் யாவருக்கும் இராக்கா குடும்பத்தை சேர்ந்த ஒரு உத்தியோகிஸ்தரால் பரிசோதிக்கப்ட்ட பின்னரே மேலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இராக்க என்ற பெயரைக் கொண்ட பலர் இலங்கை அரசர்களாக இருந்த விக்கிரமவாகு, முதலாம பராக்கிரமபாகு ஆகியோரின் கீழ் படைத்தலைமை பன்டிரந்தனர் எனவும் படைகளில் அவர்கள் வகித்த பதவிகளையும் மகாவம்சம் விபரமாக கூறுகின்றது.

பணிக்க வளவு:   இது பணிக்கர் எனப்பட்ட ஒரு குடும்பத்தினர் வாழ்ந்த இடம் இந்த வளவு தொண்டை மானற்றில் பிரபல்யம் பெற்ற இடங்களில் ஒன்று பணிக்கக் கிணறு என மக்காளால் சொல்லப்படும் கிணறு ஒன்று இருக்கிறது .

இந்தக்கிணறும் தொணடைமனாற்றிலுள்ள கிணறுகளில் மிகவும் பிரசித்த பெற்ற மூன்று நான்கு கிணறுகளில் ஒன்றாகும். பணிக்கரென்ன பெயரின் பொருள் பேராசிரியர் என்பதேயாகும். அந்தப்பெயர் வாள் வித்தையிலா திறமை பெற்ற பேராசிரியரையே அதிகம் குறிக்கும்.

 எத்தனையோ படைத் தலைவர்கள் வாழ்ந்த தொண்டைமானற்றில் அவர்களுக்கு வாள்வி்தை கற்பிப்பதற்காக அந்த வித்தையில் திறமை பெற்ற பேராசிரியர்களை கொண்ட ஒரு குடும்பம் இங்கிருந்தது. ஆச்சரியப் படத்தக்கது ஒன்றல்ல.

இங்கே நாம் சிங்கள வரலாற்றில் உள்ள ஒரு சம்பவத்தை கவணிப்போம், மலை நாட்டிலிருந்து வந்த வாள் வித்தையில திறமை பெற்ற பணிக்கன் என்ற ஒருவன் சிங்கள அரசனாகிய பராக்கிரமபாகுவிடம் சென்று தான் பெற்றிருந்த திறமையை காட்டினான் என்றும் அதைக்கண்ட அரசன் தன் குடும்பத்தில் இருந்த ஒரு அரசகுமாரியை அந்த பணிக்கனுக்கு விவாகம் செய்து கொடுத்தானென்றும் மகாவம்சம் கூறுகின்றது.

இந்த பணிக்கனுக்கும் சிங்கள ராஜகுமாரிக்கும் பிறந்த மகனை சிங்களத்தில் "சப்புமால் குமாறாய" என்றும் தமழில் "செண்பகப் பெருமாள்" என்றும் அழைக்கப்பட்டான். அவன் இளைஞனாக இருந்தபோதே யாழ்பானம் மீது படையெடுத்து வந்து அப்போ நாட்டின் அரசனாய் இருந்த கணகசூரிய சிங்கை ஆரியனை வென்று சிலகாலம் யாழ்ப்பானத்தை அரச செய்திருந்தான்.


பின்னர் இவன் யாழ்ப்பான அரசின் தலைநகராய் இருந்த சிங்கபுரம் என்ற நகரை அழித்து நல்லூரை புதிய தலைநகராக்கி அங்கே கந்தசாமி கோவிலையும் கட்டுவித்தான். பின்னர் புவனேகவாகு என்ற பெயருடன் இலங்கையரசனானான் மலைநாட்டிலிருந்து வந்தவனைன்று சொல்லப்பட்ட இவனது தந்தையாகாய பணிக்கன் தொண்டைமானாற்றில் இருந்து தான் சிங்கள நாட்டுக்குச் சென்றான் என்று எண்ணக்கூடியதாய் இருக்கின்றது



நன்றி :
=====

நூல் :தொண்டைமானாரும் செல்வச்சநிதியும்
ஆக்கியோன் : சே.நாகலிங்கம்


வெளியீடு :
வல்வை வரலாற்று ஆவண காப்பகம்
கெனடா


கருணாகர பல்லவ தொண்டைமானை பற்றி சில செய்திகள்  :



Sunday, November 10, 2013

"பல்லவர்கள் தமிழர்கள் - சத்ரியர்கள் - வன்னியர்கள் " - தொல்லியல் ஆய்வாளர் நடன.காசிநாதன்


"பல்லவர்கள் தமிழர்கள் - சத்ரியர்கள் - வன்னியர்கள் "
 என்ற தலைப்பில் தொல்லியல் ஆய்வாளர் நடன.காசிநாதன் அவர்கள்  வரலாற்று ஆசிரியர் என்.சுப்பிரமணியம் எழுதிய "social and cultural history of tamilnadu" என்ற நூலின் உதவியுடன் பல்லவர்களை பற்றிய அனைவரின் கேள்விக்கும் விடை அளித்துள்ளார்.
 








 

Saturday, June 29, 2013

பள்ளி நாட்டார் "கருணாகர தொண்டைமான்" அவர்களுக்கு "வேள் " பட்டமும் உண்டு

பள்ளி நாட்டார் , சம்பு குல வேந்தன் , வன்னியன் என்றெல்லாம் புகழாராட்டம் சூட்டப்பட்ட குலோத்துங்க சோழன் படைத்தளபதியும் , வன்னியர் இனத்தவருமான கலிங்கம் வென்றான் கருணாகர தொண்டைமான் அவர்களுக்கு "வேள் " பட்டமும் உண்டு .

வேளிர் என்று சொல்லகூடிய வேள் பட்டமும் கொண்டவர் .




Monday, December 26, 2011

வன்னிய குல பல்லவ மன்னன் கருணாகர தொண்டைமானை பற்றி கம்பர் எழுதிய சிலைஎழுபது :




கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக பல்லவநாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி. 1070-1118)கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பற்றி கம்பர்பாடியது இந்நூல். இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும்ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாகஅறியப்படுகிறது.

சிலையெழுபது எனும் நூல் மூவேந்தர் ஆட்சிக்குப் பின் தோன்றிய நூல்அல்ல. சிலை எழுபது கி.பி.12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.சோழர்ஆட்சியின்போது எழுதப்பெற்றது இந்நூல்.இந்நூல் வன்னியர் குலத்தினராகக்குறிப்பிடுவது பள்ளி இனத்தவரையே. இந் நூலில் வன்னியர் பள்ளி நாட்டார்,வீர பண்ணாடர் என்றும் தழலிடை அவதரித்தோர் என்றும்குறிப்பிடப்படுகின்றனர்.மேலும் சம்பு முனிவர் யாகத்தில் தோன்றியவர்வன்னியர் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிலையெழுபது:
--------------------------------------
பாயிரம்

கணபதி துதி

திருவளரும் வன்னியர்செஞ் சிலையெழுப தினைவிளம்ப
மருவளர்பைங் கடுக்கையும்வெண் மதியுமிலைந் தோன்வாமத்
துருவளரும் வரைமடந்தை யுவந்தளிப்பத் தோன்றிவரந்
தருவளஞ்செய் விகடசக்ரத் தந்திமுகன் றாடொழுவாம். 1

நூற்பெயரும் நூல்செய்தார் பெயரும் நுவலல்

முந்துநாள் வீரசம்பு முனிசெய்மா மகத்திற் போந்த
சந்ததி யார்சீ ரோது கெனத்தகு முதியோர் கேட்ப
இந்தணி சடிலத் தெம்மா னீணைக்கழல் பராஅ யிசைத்தான்
செந்தமிழ்க் கம்பன் செம்பொற் சிலையெழு பதுவா மிந்நூல். 2

நூலரங்கேறிய கச்சித்தலச் சிறப்பு

மெச்சுந் தரங்கக் கடலுலகின் மிளிருந்
தலங்கண் மிகவெனினும்
இச்சித் தவர்குங் குறைவெயின்முன் னிமம்போற்
கடிதற் கியலாவே
பச்சை வண்ணத் திருமாலும் பவளவண்ணச்
சோதியும் வாழ்
கச்சித் தலத்தைப் புரையுமெனக் கழறத்
தலங்கள் காணேமால். 3

சம்புகோத்திரச் சிறப்பு

சாத்திர மறைகள் சொற்ற தனிநியமம்வ ழாதோர்
சூத்திரந் தவறில்வன்னி தோன்றுமெய்ப் புகழ்காப் பாளர்
மாத்திரை யளவுஞான மறைப்பின்மா தவங்கூர் சம்பு
கோத்திர வரசர்க் கொப்புக் கூறுவதெவரை மாதோ. 4

குலோற்பவச் சிறப்பு

திங்கண்மும் மழைபிலிற்றச் செழித்துயிர்க ணனிமல்க
அங்கமோ ராறுமாறை யந்தணரா குதியோங்கத்
துங்கமனு நெறிதழைப்பத் துகளறுவன் னியினின்றும்
பங்கயனு முதலிவரைப் படைத்துலகு படைத்தானால். 5

வன்னியர் குலச் சிறப்பு

விதிகுலத்தோர் சிறப்புறச்செய் வேள்விக்குச் சிறந்தவன்னி
உதிகுலத்தோ ராதலினா லுயர்குலத்தோ ராமிவர்க்கத்
துதிகுலத்தோ ரொவ்வாரேற் சொலும்வணிக குலத்தோரும்
நதிகுலத்தோர் களுமெங்ஙன் நாட்டினிலொப் பாவாரே. 6

வன்னியர் குலச் சிறப்பு

மறைக்குலத்தி லுதித்தாலென் மறையுணர்ந்தா லென்வணிகர்
நிறைக்குலத்தி லுதித்தாலென் நிதிபடைத்தா லென்னான்காம்
முறைக்குலத்தி லுதித்தாலென் முயற்சிசெய்தா லென்வன்னி
இறைக்குலத்தி லுதித்தவரே இகபரனென் றியம்புவரே. 7

குலத்தலைவர் படைச் சிறப்பு

விடையுடையார் வரமுடையார்
வேந்தர்கோ வெனலுடையார்
நடையுடையார் மிடியுடைய
நாவலர்மாட் டருள்கொடையார்
குடையுடையார் மலையன்னர்
குன்றவர்பல் லவர்மும்முப்
படையுடையார் வனியர்பிற
ரென்னுடையார் பகரீரே. 8


நூல்

விசயதசமி நாட்கோடற் சிறப்பு

சொன்மங்கலம் பொருந்தும் தொல்லுலகிற் பல்லுயிரும்
நன்மங்கலம் பெருந்தும் நான்மறையு நனிவிளங்கும்
வன்மங்கலம் பொருந்தி வளர்வனிய குலவலசர்
வின்மங்கலம் பொருந்தும் விறற்றசமி நாட்கொளினே. 1

வில் வலிமையால் வாழும் உலகம்

கலையாய் வன்னி குலோத்துங்கர் கரத்திற்
கவின்கொண் டமைந்தவென்றிச்,
சிலையா லன்றோ வேழ்புயலுஞ் சேணிற்
பொலியுந் திவாகரனும்,
அலையார் கடலுங் கடையனலு மடன்மா
ருதமு மடங்கியொரு,
நிலையாய் நின்ற மனுநீதி நெறியு
நின்ற தறியீரோ. 2

வன்னியர் ஏந்திய வில்லேவில்

மலையினிற் பொலங்கொண் மேரு மலையன்றி
மலைமற் றுண்டோ
கலையினி லுரைப்ப வெண்ணெண் கலையன்றிக்
கலைமற் றுண்டோ
அலையினி லுகாந்த நீத்தத் தலையன்றி
யலைமற் றுண்டோ
சிலையினிற் றிறங்கூர் வனியர் சிலையன்றிச்
சிலைமற் றுண்டோ ? 3

விற்போரில் மகிழ்பவர்கள்

அமரரொரு புறமரிய முனிவரொரு புறம்விசயை
யரிவை யொரு புறமடலுறுஞ்
சமனுமொரு புறம்விரவு கழுகுமொரு புற
நெடிய தருமமொரு புறமுடைகொள்வாய்
ஞமலியொருபுற மெரிக ணலகையொரு
புறமிடர்செய் நரிகளொரு புறமகிழவெஞ்
சமர்செய்திடு மணிமவுலி யணிவனிய
குலவரசர் தமதுகர மருவுசிலையே! 4

வில்லின் வளைவுகள்

முட்டரை யறிஞராக்கும் முனிவரைத் தவஞ்சீர்ப் பிக்கும்
சிட்டருக்கரசு நல்கும் சேர்ந்தவர்க் குரம்பாலிக்கும்
மட்டறு தெவ்வர்தம்மை வலிதபவச் சுறுத்தும்
துட்டரைத் தொலைப்பவன்னி தோன்றுபொற் சிலையொன்றம்மா. 5

விற்பிடித்தல் சிறப்பு

மிடிகரக்கப் புலவருக்கு மிகுபொருளீந் திடுவார்தம்
அடியிரக்கத் தொடுபணிவார்க் கரசுதருங் கொடையாளர்
படிபுரக்க வவதரித்த பண்ணாடர் கரத்தமைவிற்
பிடியுரத்தி னாலன்றோ பெருஞான முரமுறலே. 6

வில்லால் விளைந்த நன்மை

மைப்படியு முடலவுணர் வருக்கமாய் வுற்றதுவும்
இப்படியோ டனைத்துலகு மிணையினலம் பெற்றதுவும்
நெய்ப்படியுஞ் சுசியுதித்தோர் நீள்பகழி தொடுசிலையின்
கைப்பிடியாண் மையினல்லாற் கடைப்பிடியே தியம்பீரே. 7

வில்மணிச் சிறப்பு

பணியிறைக்கங் கணனடியைப் பழிச்சுநர்வா தாபிமுடி
துணியிறைவர் பண்ணாடர் சோதிமணி முடிவனியர்
அணியிறையேந் தியவயிர மாஞ்சிலையி லடருநவ
மணியிரையக் களகளென வயிறிரையு மாற்றலர்க்கே. 8

நாணின் சிறப்பு

கன்னாணும் புயமுடையார் கடனாணு மருளுடையார்
மன்னாண்மைப் பொலிவுடையார் மணிமுடிவன் னியர்தாங்கும்
வின்னாணின் வலியாலே வியனிலம்வாழ் வதுமடையார்
தந்நாண மிழந்துவலி தாழ்ந்துகரங் குவிப்பதுமே. 9


வில்லேந்துதற் சிறப்பு

உலகறிமும் முரசொலிப்ப வுரைவில்கலி வெருண்டொளிப்ப
நிலவெனவெண் குடைகவிப்ப நிகழ்பவம்பின் புறந்தவிப்ப
இலகுபுலிக் கொடிதழைப்ப விருங்குடிகள் விருந்தழைப்ப
அலகிலவா வியற்றும்வன்ய ரணிசிலையேந் துவதம்மா. 10

உலகம் செழிப்பது வில்லாலே

அலையை யெடுக்கா விடிற்பரவைக்
காற்ற லேதவ் வரவரசன்
தலையை யெடுக்கா விடிற்பொலிவு
தரணிக் கேது விதுவளரும்
கலையை யெடுக்கா விடிற்காட்சி
கங்குற் கேது வன்னியர்செஞ்
சிலையை யெடுக்கா விடிலுயிர்க்குச்
செழிப்பங் கேது செப்பிடினே. 11

விற்போர் சிறப்பு

வட்டவுல கிற்கொடிய நெட்டவுண ரைச்சமரின்
மட்டறவி டித்தெதிரெயிற்
கிட்டவறு பட்டதலை நட்டுவிழ மொட்டையுடல்
கெட்டுருட ரக்கு ருதிநீர்
கொட்டநுரை கட்டிடமி கச்சுழிசு ழித்தலைகொ
ழித்துநதி யிற்புகவழி
விட்டுறுமி நெட்டையிடுமக் கினி குலத்தரச
விக்ரமரெ டுத்த சிலையே! 12

படை எழுந்தால் அரக்கர் அழிவர்

குடைகொண் டெழுந்தான் மாயனெடுங் குன்றந்
தனையான் குரங்களிக்கப்
புடைகொண் டெழுந்து பொழிந்தபெரும் புயல்க
ளிரிந்த வன்னியர்விற்
படைகொண் டெழுந்தார் புவிசெழிக் கப்பதறி
யவுணர் தென்பதிக்கே
விடைகொண் டெழுந்தே யொரு நாளுமீளா
வகைசென் றடைந்தனரே! 13

வில்வளைத்தற் சிறப்பு

தனுவணங்கொண் டுலகளிப்பத்
தார்வேந்த ரெனவுதித்தோர்
தனுவணங்க சனும்வெள்கித்
தாள்வணங்கு மெழின்மிக்கோர்
தனுவணங்க கலவெவர்க்குந்
தாய்போனன் றாற்றும்வன்யர்
தனுவணங்கத் தரியலர்கள்
தஞ்சமென வணங்காரோ! 14

நாணேற்றுதற் சிறப்பு

ஓங்குபுகழ் வன்னிமன்ன ரொன்னலார்த
மைப்புறங்கண் டுலகங் காக்கத்
தாங்குவரி சிலைவணக்கிச் சரோருகக்கை
யாற்றீண்டித் தனிநாண் பூட்டப்
பாங்குறுமூ வுலகினரும் பைங்கழைத்தோண்
மடநல்லார் பசும்பொன் வண்ணப்
பூங்கமுகின் மங்கலநாண் பூட்டுதல்போன்
மெய்ப்புளகம் போர்ப்பர் மன்னோ? 15

குணத்தொனிச் சிறப்பு

நெடியதிரை யெழுகடலி னொலியுமழை
முகிலொலியு நிகழும்யுக முடிவின் முடுகும்
ஒடிவில்பெரு வளிபொலியு முருமொலியு
மிணையிலென வுரகர்விழிபிதிர வெருவிக்
கொடியதிது கொடியதென விபுதர்நிலை
கெடவவுணர் குடர்குலைய வடர்திசையுடன்
படியிதிர வனியர்சிலை தழுவுகுண
வொலியினிலை பகர்வதெவனரித ரிதரோ. 16

அம்பறாத்தூணிச் சிறப்பு

உம்பர்யா மென்றிறுமாந் துறைதுண்டவ வமரர்யாங்
கம்பரா மென்றேத்தக் கவியரசாய் வாழ்வதுமுண்
டிம்பரா ருஞ்சொல்வன் யரேலாருக் கிடரிழைக்கும்
அம்பறாத் தூணியுண்டே லாவியங்கத் தெவர்க்குமுண்டே. 17


பிரமாத்திரச் சிறப்பு

வரமிகுவன் னியர்வணங்கா முடியரசர்
வண்மைதனை வரைய வேண்டிற்
சிரமகுட மன்னவராய்ப் பற்பலதே
யங்களினுந் திகழ்வோர் தம்முள்
விரவலரைப் பொன்னிலத்து மித்திரரை
யிந்நிலத் தும்வீற வாழ்வான்
விரமசிரத் தானிறுவும் பெற்றிமைகண்
டாய்ந்தெவர்தாம் பேசற் பாற்றே. 18

நாராயணாத்திறச் சிறப்பு

காரியலுங் காதலவன் னியவீர ரடுசமரிற்
கனன்றே யுய்க்கும்
பேரியனா ராயணாத் திரத்தினுக்கிந்
திராதிபிர மாதியோரும்
நேரியல வுட்குவரே லியாவரெதிர்
வாழ்த்தியதை நின்றுதாழ்வோர்
பாரியர்மங் கலநாண்பன் னாளுநிலை
பெறவரம்பா லிக்குமம்மா. 19

பாசுபதாத்திரச் சிறப்பு

உருத்திரவின் வயங்குதிங்க ளுதயனெதி ரொளிர்தருங்கொல்
உருத்திரளும் வயிரவரை யுறழ்தோளார் வன்னிமன்னர்
உருத்திரத மிவர்ந்திகலோ ருரஞ் சாய்ப்பத் தொடுக்குமழல்
உருத்திரவன் படைக்குமற்ற வும்பர்படை யொப்பாமோ. 20

அபிமந்திரித்தற் சிறப்பு

அக்கரமொன் றக்கரமன் றக்கரமைந்
தக்கரமெட் டாதியாய
எக்கடவுண் மந்திரமு மெண்ணிலுருச்
செபித்துநினை வெய்தினோரும்
மிக்கதிது வெனவியப்ப விறல்வன்ய
குலவரசர் விடுங்கோல் சென்று
தக்கவபி மந்திரமாட் சியினமர்வென்
றிறைவனிடஞ் சார்தலாலே. 21

நாணிறங்குதற் சிறப்பு

பூதலத்தோர்க் கிடரியற்று மரக்கருடல்
பிளந்துவெற்றிப் புனைந்த வோலை.
மீதலத்தோர்க் குணரவிடுத் தவர்பயந்தீர்த்
தாக்கியர்கள் வெரீஇத்தோ டோ ய்ந்த,
காதலர்தா ரணிவனியர் தனிச்சிலை
நாண் களித்திறங்கித் தயங்குமாதோ. 22

வீரவாட் சிறப்பு

விண்ணவர்க்கு விருந்தினராய் மேவியர மாதரின்பம்
மண்ணின்மரு வலர்மருவ வாழ்விக்கும் பண்ணாடர்
திண்ணமுறு வன்னிமன்னர் திருக்கரத்தி லேந்தியமர்
நண்ணும்வய வாண்மகிமை நாமெங்ங னவில்வதுவே. 23

வேலேந்திய காலாட்படைச் சிறப்பு

செய்யகத்து வளநாடு தேர்புலவர்க் கினிதளிப்பார்
மெய்யகத்து வன்னியர்செவ் வேள்பலவா முருக்கொளல்போல்
கையகத்து வேலேந்து காலாளின் படையினன்றி
வையகத்து மருவுகலி மற்றொன்றா லகலாவே. 24

யானைப்படைச் சிறப்பு

ஓரானை முகத்தானை யுலகத்தோர் முன்னிறுத்திப்
பேரான கருமமெலாம் பிறழாது முற்றுகிற்பார்
காரான வுடலவுணர் கலங்குறமுன் னிறுத்திவன்யர்
போரானைப் படையானே போர்வயங்கோ டலினன்றே. 25

குதிரைப்படைச் சிறப்பு

பூவேறி நான்முகனும் புள்ளேறித் திருமாலும்
சேவேறிக் கண்ணுதலுஞ் செய்வதென்னே தீஞ்சுவைகொள்
பாவேறிப் புகழ்பெற்றுப் பாராளும் வனியர்தழல்
மாவேறிப் பகைவென்று மாநிலங்காத் தருள்வாரே. 26


தேர்ப்படைச் சிறப்பு

பார்விழாப் பெறக்காக்கும் பண்ணாடர் பதமலரில்
போர்விழாப் புரிவேந்தர் பொன்னவிர்மா முடிவணக்கி
யார்விழா திருப்பார்க ளமரர்மலர் மழைசொரியத்
தேர்விழா வுறவுகைக்கிற் றிருவிழாத் தினமென்றே. 27

பிறர் தேரும் இவர் தேரும்

செங்கதிரோ னோராழித் தேரேறித் திகழ்வதுவும்
அங்கசன்மா ருதத்தேரூர்ந் தடலாண்மை செலுத்துவதும்
துங்கமனு நெறிபிழையாத் துகளறுவன் னியவீரர்
அங்கிரத மிவர்திறத்துக் கணுவளவு மிணையாமோ. 28

அகழியின் சிறப்பு

பேராழிச் செலுத்திவயம் பெறவனியர்க் கிடமாகிக்
கூராழிப் பரனகரைக் குறைசொல்கம்பை நகருடுத்திட்
டோ ராழித் தேரிருபா லொதுங்கவய ரெயிற்புடைசூழ்
சீராழி யாமகழின் சிறப்பெவரே யுரைப்பவரே. 29

அரண் சிறப்பு

சரண்புகுந்தீ சனைச்சான்றோர் தம்முயிரைக் காப்பரெனும்
வரம்புளதங் கதுவியப்பின் மருவியதோர் வழக்கன்றால்
முரண்புகதோட் செருநர்வரின் மூதுலகோர் வன்னியர்தம்
அரண்புகுந்து தம்முயிர்காத் தமர்ந்திருப்ப ராதலினே. 30

கொடிச் சிறப்பு

சுடர்க்கொடியும் வனக்கொடியுந் துகளில்வெற்றிப் புலிக்கொடியும்
அடற்புவிமூன் றினுந்தாமே யரசியற்றும் படிதாவக்
கடற்புவியி னிரந்தரமுங் கருணைபுரி தாயேபோல்
இடர்ப்பகையீ லாதுவன்ய ரெவ்வுயிரும் வளர்ப்பாரே. 31

அரசாட்சி மண்டபச் சிறப்பு

அண்டர்மலர் மழைசொரிய வந்தணர்பல் லாண்டிசைப்பத்
தண்டனிட்டுப் பொன்வேய்ந்து சயங்கூற வண்ணிமன்னர்
கொண்டபசும் பொன்வேய்ந்து குலவுபல மணிகுயிற்றும்
மண்டபத்தில் வீற்றிருக்கை மண்டபம்பெற் றிடுபேறே. 32

சிங்காதனத்திருத்தற் சிறப்பு

தங்காத னன்பனிறை யென்ன மாதர்
சந்ததமுந் தொழுதெழுவார் சலியா தாகம்
தங்காத னனையநட்பிற் சிறந்தே யாவுந்
தகுபுலிய மோர்துறையிற் றண்ணீர் மாந்தும்
சிங்காத னம்பசும்பொன் மணிதூ சாதி
தெளிவுறுவே தியர்க்கு தவும்வன் னிமன்னர்
சிங்காத னத்தின்மிசை யமர்ந்து நாளுந்
திகழரசு செயுங்கருணைச் செயலா லன்றோ. 33

முடிதரித்தற் சிறப்பு

தன்முடிமேற் புவிதாங்குந் தனியரவிற் றுயில்வோற்கும்
சொன்முடிவாம் பரமனுக்குந் தோன்றுமினைப் பொழுத்திடுவார்
பொன்முடிசென் னியிற்றாங்கிப் புகழ்வனிய வரசரொன்னார்
முன்முடியக் குடிதழைய மூதுலகம் புரத்தலினே. 34

மகுடங்கள் நிலைப்பது இவர் மகுடத்தாலே

தேவர்முடி திங்கண்முடி சேணாரு மிரவிமுடி
மூவர்முடி முனிவர்முடி மும்மையுல கினில்வாழ்வோர்
யாவர்முடி யும்விளங்கு மென்றுமொரு முடிவில்லாக்
கோவிறைவன் னியர்முடிமேற் குலவுமுடி விளங்கலினே. 35

புயகேயூர கிரீடச் சிறப்பு

இயனடுநீண் டிருபுடைதாழ்ந் திடவமைத்த வணைமூன்றின்
அயன்முதன்மூ வருந்தொழின்மூன் றாங்கியற்ற வமர்ந்ததுபோல்
வயமுறுவன் னியவரசர் வடவரைபோல் வீறியதின்
புயமுடியு மணிமுடியும் பொருந்தியது புதுமைத்தே. 36


குடைச் சிறப்பு

படையுடைய படிவேந்தர் பணிந்திடுவோர் மனுநீதி
நடைவருணாச் சிரமநெறி நழுவாது காத்தெவர்க்கும்
விடையவன்ற னருள்பெற்ற வீரவன்னி மன்னர்கொற்றக்
குடைநிழலைத் தந்துகலிக் கோடைதணித் திடுவாரே. 37

செங்கோற் சிறப்பு

வெங்கோப மதம்பொழியும் விண்ணவர்கோ
னும்பனிகர் வேழ முண்டோ
பைங்கோலஞ்சேர்கனகப் பஞ்சதரு
வனையபா தபமற் றுண்டோ
இங்கோத வான்சுரபிக் கிணையுண்டோ
வன்னிமன்ன ரெனுமேன் மக்கள்
செங்கோலுக் கெதிராங்கோல் செகதலத்தி
லொன்றுண்டோ செப்புவீரே. 38

செங்கோல்வண்மைச் சிறப்பு

வீரசம்பு முனிவேள்வி விளங்கவரு முடிவேந்தர்
சீர்மருவு கரத்தேந்து செங்கோலன் றிறத்தானே
நேரறுதீக் கடைகோலு நிறைகோலு நீடுலகில்
ஏரடரு முழுகோலு மிடரின்றி யிருப்பதுவே. 39

செங்கோல்நடத்தற் சிறப்பு

சீராரும் வன்னிமன்னர் செங்கோன்மை செலுத்துதலால்
சோராது சுரர்க்கும்பூ சுரர்க்குமிகு சிறப்புண்டாம்
நீராரும் புவியின்மனு நெறிதவறா தென்பதன்றி
ராலும் பழுதுரைக்க லாமோசொல் வல்லீரே. 40

அறநெறியின் சிறப்பு

தாரேந்து புயவேந்தர் தழலிடைவந்
தவதரித்தோர் தனுவான் மிக்க
சீரேந்து மறத்தினெறி திறம்பாது
நிற்கின்ற செயலா லன்றோ
காரேந்திச் சொரிமழையுங் கலைமறையும்
வாணிபமு மடவார் கற்பும்
ஏரேந்து மவர்வாழ்வு மிடரின்றி
நிற்பதன்றி யென்கொண் டம்மா. 41

ஆக்கினைச் சக்கரச் சிறப்பு

ஊழிக் கிறைதண்கடல்வீழ்ந்தான்
உம்பர்க் கிறையந் தரமானான்
கோழிக் கிறைதன் றாதைவரை
குறுகி னானெஞ் சறநாணி
மேழிக் கிறைமூ விரணடினொன்று
மேவப் பெறுவன் னியர்செலுத்தும்
ஆழிக் கிறைநா டொறுமாறா
தகிலமுழுதுங் காத்தல் கண்டே. 42

தொழில்நெறி பிறழாமைச் சிறப்பு

கற்பத் தொழியா மறைபயிலுங்
கவின்மே வியவந் தணர்தொழிலும்
சிற்பத் தொழில்வை சியர்தொழிலுந்
தினமுமுயர்முக் குலத் தோரைப்,
பொற்பத் தொழஞ்சூத் திரர்தொழிலும்
புகலெத் தொழிலுமுறை பிறழ்ந்தே
அற்பத் தொழிலா காதரசாள்
வதுபண் ணாட்டார் தந்தொழிலே. 43

முத்திரைமோதிரச் சிறப்பு

எத்திசைமன் னவராணு முத்திரிக்கு மீதன்றிப்
பத்திமையி லார்க்கந்தப் பரனுலகு முத்திரிக்கும்
சத்தியம்பொய் யாதுவைகிச் சகம்புரக்கும் வன்னியர்கைம்
முத்திரையா ழிக்குநிகர் மூதக்கீர் மொழியீரே. 44


துட்டநிக்கிரகச் சிறப்பு

தீட்டா தமையுஞ் சிவநிந்தை
செய்வோ ரையுஞ்செங் கோன்முறையேர்
பூட்டார் தமையும் பொய்யரையும்
போர்வெங் களத்துப் போந்துபுறங்
காட்டார் தமையுங் கள்வரையுங்
கலிதீர்ந் திடக்காட் டியவறத்தை
நாட்டார் தமையு நானிலத்தி
னாட்டார் நவில்பண் ணாட்டாரே. 45

வாயில்மேவுதற் சிறப்பு

கடிந்தாரைக் களைவனியர் காப்பாளர் சமர்க்களத்தில்
மடிந்தாலுஞ் சுவர்க்கமுண்டாம் வாயில்காத் தவரடியில்
படிந்தாலு மரசுண்டாம் பகர்வதெவன் பாரிடத்தில்
விடிந்தால்வேந் தன்வாயின் மேவாதார் யாருளரே. 46

தொழுதல் முதலிய சிறப்பு

அணங்காற் றருவில் லேந்திமுறை
யரசாள் வன்னிச்சயதரரை
வணங்கார் யார்கை கூப்பார்யார்
வாரிசூழும் வையமிசை
இணங்கார் யார்நின் றேத்தார்யா
ரேவற் பணிசெய் யார்யார்
மணஞ்சார் முற்றங் காத்திருந்து
வாழ்நாண் மகிழார் யார்யாரோ. 47

செல்வாக்கின் சிறப்பு

பாவசையு நாவலர்பால் பத்திமிக வைத்துதவும்
பூவசையு மணிமார்பர் புகழினுக்கோர் நிகரின்றால்
மாவசையாப் பெருஞ்செல்வர் மாதிரங்காக் கும்வனியர்
நாவசைய நிரந்தரமும் நாடசையா திருந்திடுமோ. 48

வன்னியரின் புகழ்

ஆந்துணையாம் வன்னியர்போ லார்துணைப்பட் டாதரிப்பார்
போந்தரிகள் வணங்குமிவர் புகழ்சிறிதோ யாம்புகழ்தற்
கேந்துகர மிரண்டினும்பொன் னிலக்கமறச் சொரியினுமிவ்
வேந்தர்புகழ்க் கிணைநாவால் வேறுபுகழ் கூறேமால். 49

திருமங்கை ழ்வாரால் பாடப்பெற்றோர்

வளமருவு மங்கையர்கோன் சொலத்தகுபல்
லவராயன் மரபிற் றோன்றிக்
களமருவு கறையுடைய கண்ணுதல்கச்
சியின் வாழே கம்பரேசற்
குளமருவு மன்பினரா யொளிர்மகுட
மணிப் பொற்றே ருதவிமேனாள்
தளமருவு தாமரைபோன் முகவனியர்
படைத்தபுகழ் சாற்றற் பாற்றோ. 50

மாசு அகற்றற் சிறப்பு

மின்னு மிரவிதனிற் றோன்றும் வேந்தர் குலத்தில் வருமாசும்
மன்னு மதியந் தனிற்றோன்று மன்னர் குலத்தில் வருமாசும்
துன்னுந் திரைத்தண் கடலுலகிற் றொலைக்குந் தூய்தாங் கடற்றோன்றும்
பன்னுபுகழ்கொ ளரசர்களே பார்க்கின்மாசு தீர்ந்தாரே. 51

எல்லாவிதத்திலும் சிறந்தோர்

கலையான் மிக்கோ ருலகளிக்குங்
கருத்தான் மிக்கோர் கனகமணி
மலையான் மிக்கோர் நிலவுகுடை
வளத்தான் மிக்கோர் ருடைமாறா
நிலையான் மிக்கோர் இனிதோங்கு
நெறியான் மிக்கோ ரிகல்வெல்லுஞ்
சிலையபன் மிக்கோர் வன்னிமன்னர்க்
கெவர்தான் மிக்கோர் தெளிதரினே. 52

குணச் சிறப்பு

ஆக்கமுன் னிடினுய ரறத்தை யாக்குவர்
போக்குமுன் னிடிற்பொருந் தாரைப் போக்குவர்
காக்கமுன் னிடிற்கட னிலத்தைக் காப்பர்நல்
லூக்கமுன் னிடுகுணத் தோர்பண் ணாடரே. 53


இதயவண்மைச் சிறப்பு

சமய வளமுஞ் சிவனுமைமால்
தலத்தின் வளமுங் குலவளமும்
அமையு நிலத்தின் வளமுமுழு
வாளர்வளநல் லறவளமுந்
தமையொப் பிலர்கற் புறுவளமுஞ்
சகலவளமுந் தமிழ்வேந்தர்
இமையப் பொருப்பர் பண்ணாட
ரிதயவளத்தின் நிறத்தானே. 54

இராஜசமூகச் சிறப்பு

வானோர் வியக்குஞ் சமூகமுது
மறையோர் வாழ்த்துஞ் சமூகமலர்த்
தேனார்ந் திருக்குஞ் சமூகமன்னர்
திறைகளளக்கும் சமூகம்விழி
மானார் நடிக்குஞ் சமூகமதி
வல்லோர் துதிக்குஞ் சமூகமொன்னார்
ஆனா திறைஞ்சுஞ் சமூகம்வன்னி
யரசர் சமூகமதுதானே. 55

பதியிருத்தற் சிறப்பு

பண்ணாடர் தமதுபெரும் பதியிருப்ப தாலிமையோர்க்
கொண்ணார்ந்த சிறப்பிருக்கும் இம்பர்மனு முறையிருக்கும்
கண்ணாமுத் தமிழிருக்குங் கற்றோர்க்குப் புகழிருக்கும்
விண்ணார்ந்த மழையிருக்கு மிடியிருக்க மாட்டாதே. 56

மன்னர்சூழ்தற் சிறப்பு

பொன்னணைய மரதனம்போற் புகழணையும் பெருநிதிபோன்
மன்னணையு நெடும்படையோன் மலரணையு மளியினம்போற்
றன்னிகரா ரெனத்தழலிற் சகலகலை யுடனுதித்த
மன்னரையே மன்னரெலா மதித்தணைந்து வாழ்வாரே. 57

மொழிதவறாமைச் சிறப்பு

விண்ணொளிர்வெங் கதிரொளியும்
விதுவொளியும் விளக்கொளியுந்
தண்ணொளிகாண் மணியொளியுந்
தகைசான்ற வொளியாமோ
கண்ணொளியா யுறைவனியர்
காத்தருள்பொய் யாவொளியே
மண்ணொளியா வொளியெனமா
மறையொளியா வழுத்தலினே. 58

சாந்தம் முதலிய பண்புகளாற் சிறப்பு

சாந்தமிரட் சகத்தாலுந் தகைபெறுவை பவத்தாலும்
ஆர்ந்தபுய பலத்தாலும் அழகமைந்த திறத்தாலும்
ஏந்துபுக ழரன்மாலிந் திரன்குகன்வே ளெனவன்னி
வேந்துசிறந் திருப்பதையிம் மேதினியே விளம்பிடுமால். 59

கொடைவளத்தின் சிறப்பு

வையந் தழைப்ப மறைதழைப்ப
மறையோர் புரிய மகந்தழைப்பச்
செய்யுமுனிவர் தவந்தழைப்பச் செங்கோ
றழைப்பச் சீர்தழைப்பப்,
பெய்யு முகில்போற் றுங்கவன்யர்
கைம்மா றுகவா மற்பெறுவோர்,
கையுந் தழைப்ப மெய்தழைப்பக்
கனகம் பொழி வார்காணீரே. 60

வள்ளல்தன்மைச் சிறப்பு

புள்ளிபல வாயினும்புன் பூசைபுலி யாகாவே
வெள்ளிபல வாயினும்வான் வெண்மதியொன் றாகாவே
துள்ளல்பல வாயினுமோர் தூய்கருட னாகாவே
வள்ளல்பல ராயினுநல் வன்னியர்க்கொப் பாகாரே. 61

அடுத்தவர்க்குத் தாழ்வின்றெனல் சிறப்பு

மேருவினைச் சார்ந்தவரை மிடியணுகு மோதேவ
தாருவினைச் சார்ந்தவரைத் தழற்பசிவந் தணுகிடுமோ
நேருரைசெ யாவனிய நிருபர்நெடுங் கழலிணையைச்
சாருமவர் தமையிறையுந் தாழ்வென்ப தணுகுறுமோ. 62


உமை முதலியோரின் அருள்பெற்றோரெனற் சிறப்பு

கலைமகடன் மைந்தரெனக் கலைஞானம்
பெறுகையினால் கடல் சூழ்பூமித்
தலைமகடன் மைந்தரெனச் சகமுழுது
மரசாளுந் தன்மை யானீ
டலைமகடன் மைந்தரென வாக்கத்தாற்
றழலிலவ தரித்த றன்னால்
மலைமகடன் மைந்தரென வரமளிக்கப்
பெறும்வனியர் மகிமை யென்னே. 63

அஷ்ட ஐசுவரியச் சிறப்பு

சாகரத் துலகினிட்டைச் சம்புமா முனியியற்றும்
யாகவுற் பவராம் வன்யரியாவையும் புரக்குமாறு
வாகன மக்கள்சுற்ற மடிமைபொன் மணிநெல் லேகம்
ஆகர சாட்சி யோடெட் டயிச்சுவரியம்பெற் றாரே. 64

தசாங்கச் சிறப்பு

வளங்குலவு பண்ணாடு மதக்களிறான் புலித்துவசம்
விளங்குமக மேருமனோ வேகரத மும்முரசு
களங்கறுகங் காநதிவெங் கனற்பரிவா டாமாலை
துளங்கலிற்பொற் சிலைபெற்றோர் துதிபெற்ற வன்னியரே. 65

அரசின் சிறப்பு

நாடுபல வினுக்கரசு பண்ணாடு நகர்க்கரசு
நலஞ்சேர் கச்சி
நீடுவரை களுக்கரசு மாமேரு நதிக்கரசு
நிறைநீர்க் கங்கை
பூடுபெறு சிலைக்கரசன் வுருத்திரன்வெஞ்
சிலையகிலம் பெரிதுகாக்கச்
சூடுமணி முடியரசுக் கரசுவன்னி யரசன்றிச்
சொலவே றுண்டோ . 66

வில்லின் புகழ்கூறுதற் சிறப்பு

மேவரு மேரு வொத்த வீரபண் ணாடர்வில்லைத்
தேவரே கூறல்வேண்டுந் திசைமுக னாதியாய
மூவருங் கூறல்வேண்டு முனியகத் தியனனந்தன்
வாய்வளங் கூறல்வேண்டு மற்றெவர் கூறுவாரே. 67

பரிசுதரற் சிறப்பு

அவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந்
தருள்வன் னியரை யாம்புகழ்ச்
செவிக்கா ரமுதமெனக் கேட்டுச்
சிந்தையுவந்து சீர்தூக்கிப்
புவிக்கா யிரம்பொ னிறைநீக்கிப்
பொற்றண் டிகபூடணத்தோடு
கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்
கருணாகரத்தொண்டை வன்னியனே. 68

இதுமுதல் மூன்று கவிகள் - வாழ்த்துச் சிறப்பு

தனுமறை யெனுமி வளர்கவே
தரணியி லறநனி விளைகவே
மனுநெறி வகையுயிர் பெறுகவே
மணிமுதலியவள நிறைகவே
கனமுறை மையின்மழை பொழிகவேகளையிற
வுயர்பயிர் தழைகவே
இனமொடு சுரபிகள் பெருகவே
யிணையறுபுலிவிரு துயர்கவே 69

அவிசொரி வேள்வியைப் பாடினமே
யயோநிசம் பவர் தமைவாழ்த்தினமே
அவனிக் கிறைவரைப் பாடினமே
யறமெண் ணான்குற வாழ்த்தினமே
தவளக் கவிகையைப் பாடினமே
தழல் வெம்புரவியை வாழ்த்தினமே
தவமிகு வணியரைப் பாடினமே
தனி நெடுஞ்சிலையினை வாழ்த்தினமே. 70

பூவாழி மறைவாழி புகல்செம்பொற் சிலைவாழி
பாவாழி சுடர்வாழி பகர்சம்பு முனிவாழி
மாவாழி யகளங்க வனியர்பெருந் தமர்வாழி
கோவாழி யிவர்தணிச்செங் கோல்வாழி வாழியவே. 71


சிலை எழுபது வன்னியரை மலையமன்னரெனவும் பல்லவரெனவும் வருணிப்பதுகவனித்தற்பாலதுசோழப்பெருமன்னர் காலத்திலே தொண்டைமண்டலத்திலாண்டகிழியூர் மலையமான்களையும் பல்லவமரபில் வந்த காடவ அரசர்களையுமேநூல்இவ்வாறு குறிப்பிடுகின்றதுஇக்குறுநில மன்னர் வன்னியரா யிருந்தமைக்குக்கல்வெட்டுச் சான்றுகள் ஆதாரமாயுள்ளன.